சின்னச் சின்ன சந்தோஷங்கள்

அதிகாலை அமைதியில் அவசரமின்றி அமர்ந்து

ஆற அமர குடிக்கும் சூடான காபி

 எட்டு மணி பள்ளிக்கு எட்டி நடை போட்டு

பள்ளியை எட்டியவுடன் வந்து கட்டிக்கொள்ளும்

குட்டித்தங்கங்கள்

 இரவுச்சாப்பாட்டுக்கு பனீர் பட்டர் மசாலா

அறிந்தவுடன் என் பருவ மகன் முகத்தில் படரும்

வெட்கம் கலந்த புன்னகை

 காலை மாலை நேரம் பாராமல் கைத்தொலைபேசியில்

கூப்பிட்டவுடன் என் அம்மாவின் கனிவான

“சொல்லுடி சௌம்யா..”

 காலை உணவை வாயில் அள்ளிப்போட்டு

கைப்பையும் கணினிப்பையுமாய் காரில் ஏறி

கிடைக்கும் பதினந்து நிமிடப் பயணத்தில்

கொஞ்சமாய் பேசும் கணவனுடன்

நெஞ்சாரக் கதைக்கும் குட்டிக் கதைகள்

 இதமான இரவில் இயற்கையோடு கை கோர்த்து

நடை பயிலும் போது காதில் பாயும்

இளையராஜாவின் இன்னிசை.. 

தைப்பூசம்

கந்தா உனை நெஞ்சில் நினைந்து

காவடியைத் தோளில் சுமந்து

கண்ணாரக் காண கால் நடையாய் நடந்து வந்தோம்

 கண்டவுடன் எதுவும் கேட்க மனமில்லை கதிர்வேலவா

கேளாமலே வரம் கொடுக்கும்

கண்கண்ட தெய்வம் நீயல்லவா

மௌனம் பழகு

கருத்து வேறுபாடுகள் கசப்பான கோபங்கள்

கட்டிப் போடு வார்த்தைகளை மனமே

மெளனம் பழகு ஒரு நிமிடம்

 மலைபோல் வெற்றி மட்டில் லா மகிழ்ச்சி

இறுமாந்த மனமே

மெளனம் பழகு ஒரு நிமிடம்

 தோல்விகள் தடுமாற்றங்கள்

தொண்டைக் குழியில் தாளா துக்கம் தளராதே மனமே

மெளனம் பழகு ஒரு நிமிடம்

 சந்தேகங்கள் சலனங்கள் சலித்துப் போன சமாளிப்புகள்

சத்தமில்லாமல் மனமே

மெளனம் பழகு ஒரு நிமிடம்

 எதிபார்ப்புகள் ஏமாற்றங்கள்

எண்ணிப்பார்க்காத திருப்பங்கள்

ஏங்காதே மனமே

மௌனம் பழகு ஒரு நிமிடம்

 உன்

ஒரு நிமிட மெளனம் கொடுக்கும்

உன்னதமான மெய்ஞ்ஞானம்

குறையும் அழகே

முழுமை தான் அழகா

பொய்யாக்கியது பிறைச்சந்திரன்

அதிகாலை இனிமை

அமைதியான அதிகாலை

அருமையான காபி

தொண்டையை நனைக்கும் போது தோன்றும் எண்ணம்

‘அம்மா உனக்கும் இந்த அதிகாலை இனிமை அமைந்ததா அன்று? அல்லது அடுக்களையில் 

அடுக்கி வைத்த பாத்திரம் போல் அடுத்தடுத்த வேலைகள் உன்னை  ஆட்கொண்டதா?’

வசந்த காலம்

மூடுபனி தந்தது சோம்பேறித்தனம் 

முறியடித்து முரசு கொட்டிய சூரியக் கதிர்களுக்கு 

வசந்தத்தின் பரிசு

பூ(ரி)த்துக் குலுங்கும் பூங்கொத்துகள்

வருத்தம்

சூரியன் மறைந்து போனது

சுறுசுறுப்பு குறைந்து போனது

விளையாடும் நேரம் வந்துது விண்மீன்கள் வரவில்லை

வருத்தத்தில் கூடைப்பந்து – வெண்ணிலா

தன்னம்பிக்கை

தார் ரோட்டில் சித்திரம் தீட்ட

தன்னம்பிக்கையுடன்

தன் பூக்களை தூரிகையாக்கியது

கொன்றை மரம்

பெண்மை

                                                                                  Source Credit: Wikimedia Commons

அடங்க மறு பெண்ணே உன்னை

அடக்கியாள நினைப்பவரிடம்

இணங்க மறு பெண்ணே உன்

இயலுபுத் தன்மையை ஏற்காதவரிடம் – இணைந்து

செயல்பட மறு பெண்ணே உன்

சுய சிந்தனையை மதிக்காதவரிடம்

உதறிவிடு பெண்ணே உன்

உரிமைகளை எள்ளுபவர்களை

உன்னதமானவள் நீ

உணர்ந்து கொள் அதை

உயர்த்திக் கொள் உன்னை

உலகம் உயரும்..

வண்ணச்சிதறல்கள்

கருத்த மேகம் விட்டுக் சென்றது

மண்ணில் மழைத்துளிகளை

என் மனதில்

வண்ணச் சிதறல்களை

மனம் ஒரு திடப்பொருள்

திடப்பொருளில் கனமானது மூழ்கும்

கனமற்றது மேல் எழும்

மனமும் ஒரு திடப் பொருளே

கனத்தால் கவலையில் மூழ்கும்

லேசானால் சிறகடித்துப் பறக்கும்.

கோடை மழை

தளிர் இலை அதன் மேல் துளித்துளியாய் நீர்

சுட்டெரிக்கும் சூரியனுக்கு விடுமுறை கொடுத்தது கோடை மழை!

ஆழ்கடல் முத்து

காதல் நீர்க்குமிழி அல்ல

சட்டென்று தோன்றி பட்டென்று மறைந்து விட

ஆழ்(மனக்)கடலில் அரிதாகத் தோன்றும்

அப்பழுக்கில்லாத நல்முத்து

                                               –    சௌம்யா

 

14 comments

  1. என் அழகான அறிவான தோழியின் அருமையான கவிதைகள், படிக்க படிக்க ஆனந்தம் 😄😄 , என்னை மிகவும் கவர்ந்த வார்த்தைகள் அந்த ‘சொல்லுடி சௌம்யா’ அம்மாவின் அன்பான வார்த்தைகள்
    அருமையான கவிதைகள், வாழ்த்துக்கள் சௌம்யா

  2. அருமை சௌம்யா….
    எனக்கு மிகவும் பிடித்த வரிகள்..
    “முழுமை தான் அழகா

    பொய்யாக்கியது பிறைச்சந்திரன்”.
    வாழ்த்துகள் சௌம்யா.

  3. சின்ன தலைப்பு
    சிந்தனை சிறப்பு
    எளிய மொழி நடை
    சிறுகுடல் பட்டி வகை
    நன்று செயதீர்
    என்றும் செய்வீர்!
    சின்ன வாழ்த்து
    சாங்கி காத்திருப்பில்!

    1. காத்திருக்கும் நேரத்தில்
      கவிதையாய் கருத்து
      நன்றி

  4. நீல வானம்
    வென்மேகக்கூட்டம்
    நடுவே
    தென்றலாய் உனது
    கவிதைக்கூட்டம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *